அரசுப்பள்ளிகளில்
ஆங்கிலவழிக் கல்வி தமிழக அரசின் சாதனையா? தமிழ் மக்களுக்கு சோதனையா?
சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!
“அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தமிழக
அரசின் சாதனையா? தமிழ்
மக்களுக்கு சோதனையா?”என்ற தலைப்பில்,
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில், சென்னையில் 28.07.2015 அன்று சிறப்புக்
கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
சென்னை தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் பள்ளியில் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு,
தமிழகத் தமிழாசிரியர் கூட்டமைப்பு மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் தலைமையேற்கிறார்.
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.
“ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பும் சமூகநீதி மறுப்பும்” என்ற தலைப்பில்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்திதேவி அவர்களும்,
“தமிழ்வழிக்கல்வியை வளர்க்க அரசு செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் மக்கள் கல்விக்
கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் பிரபா. கல்விமணி அவர்களும், “ஆங்கிலவழிப் பிரிவுத்
திணிப்பும் அதன் பாதிப்பும்” என்ற தலைப்பில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர்
திரு. பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
இக்கருத்தரங்கில், தமிழ்வழிக் கல்விக்கூட்டியக்கத்தில் உறுப்பு
வகிக்கும் பல்வேறு அரசியல் இயக்கங்கள் – கட்சிகளின் தலைவர்களும், தோழர்களும் பங்கேற்கின்றனர்.
இது குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில்
பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
தமிழ்நாடு அரசு கடந்த 2012-13 கல்வியாண்டில் இருந்து அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தைப்
பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகள் 1 ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு
செய்து செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் ஆங்கில வழிப் பிரிவுத் திணிப்புத் திட்டம்
பள்ளிக் கல்வியில் இருந்து தமிழை வெளியேற்றும் திட்டம் என்று கண்டனம் செய்தும்,
இத்திட்டத்தைக் கைவிட்டு +2 வரை தமிழ் மொழியைக் கட்டாயப் பாட மொழியாகவும் (Languange) கட்டாயப் பயிற்று
மொழியாகவும் செயல்படுத்துமாறு வலியுறுத்தியும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் 2012 மே மாதத்திலிருந்து பலவகையான போராட்டங்களை நடத்தி
வருகிறது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் தமிழ்நாடு அரசு கடந்த
சில நாட்களுக்கு முன் கல்வி அதிகாரிகளுக்குக் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் இன்னும் பல அரசுப் பள்ளிகளில்
ஆறாம் வகுப்பிலும் மற்ற வகுப்புகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கவில்லை
என்றும் நடப்புக் கல்வியாண்டில் கட்டாயம் ஓர் அரசுப் பள்ளிகூட விடுதல் இல்லாமல்
ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்றும்
அதிகாரிகளுக்குக் கட்டளை இட்டுள்ளது. இதை எதிர்த்துத் தொடர்
போராட்டங்களுக்குத் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு
பகுதியாக ஆங்கில மொழி பற்றியும் ஆங்கிலவழிக் கல்வி பற்றியும் நம்பப்படும் செய்திகளின்
உண்மைத் தன்மை பற்றி ஆய்ந்து அறியும் நோக்கில் இக்கருத்தரங்கத்தைக் கூட்டியக்கம்
ஒழுங்கு செய்துள்ளது.
·
தாய்மொழி அல்லாத வேறொரு மொழியில் கற்கும்
பழக்கம் உலகில் வேறெங்கேனும் உள்ளதா?
·
அயல் மொழியைப் பயிற்று மொழியாய்க் கொண்டுப்
படிப்பது அறிவியலுக்கு உகந்ததா?
·
ஒருபக்கம் பளபளக்கும் அரசு மதுபானக் கடைகள்,
மறுபக்கம் பாழடைந்த அரசுப் பள்ளிகள். இப்படி
இருக்க அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவருவதன் நோக்கம் என்ன?
·
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு
வருவது ஏழை எளிய மாணவர்களுக்கு வாய்ப்பா? அவர்களின்
எதிர்காலத்திற்கு வைக்கப்படும் ஆப்பா?
·
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு
வருவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு
விளையப் போவது நன்மையா? தீமையா?
·
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழியில் பாடம் கற்றுத்
தரத் தகுதியுள்ள ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா?
·
ஆங்கிலவழியில் படித்தால்தான் பல ஆயிரங்கள்
சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்பது உண்மையா? பொய்யா?
·
ஆங்கிலவழியில் படித்தவர்கள் வாழ்க்கையை
எதிர்கொள்ள முடியாத தன்னம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத்
தெரியுமா?
·
தாய்மொழியில் படித்தால் அறிவு வளருமா? அயல் மொழியான ஆங்கிலத்தில் படித்தால் அறிவு வளருமா?
·
அறிவியல் - வரலாறு முதலிய பாடங்களை
ஆங்கிலவழியில் படிப்பதைத்தான் எதிர்க்கிறோமே அன்றி, ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்பதை எதிர்க்கவில்லை
என்பது உங்களுக்குத் தெரியுமா?
·
தேர்ச்சியை அதிகமாகக் காட்டவும் முதல் மதிப்பெண்
பெற வைக்கவும் தனியார் பள்ளிகள் செய்யும் சட்ட விரோதச் செயல்கள் - மாணவர்களின்
அறிவு வளர்ச்சியை பாதிக்கும் தகிடுதித்தங்கள்
உங்களுக்குத் தெரியுமா?
இன்னும் பல கேள்விகளுக்கு விடை காணவும், பன்னாட்டுக் கல்வி முறை குறித்து அறியவும், படிப்பைப் பயனுள்ளதாக்கிடவும், பெற்றோர்களும், பொது மக்களும் கருத்தரங்கிற்கு
பெருந்திரளாக வரவேண்டுமென, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment